செய்யாறு, ஜூலை 31: செய்யாறு அருகே சாலையின் குறுக்கே திடீரென புகுந்த மாட்டின் மீது பைக் மோதியதில் தவறி விழுந்த தாய் பலியானார். மகன் படுகாயம் அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் திருவத்தூர் கிழக்கு மாடவீதியை சேர்ந்தவர் ேசகர், கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி(48). இவர் கடந்த 25ம் தேதி மதியம் தனது மகன் தினேசுடன் பைக்கில் தவசி கிராமத்தில் உள்ள வாராகியம்மன் கோயிலுக்கு சென்றார். சேத்துப்பட்டு சாலையில் உள்ள கீழ்மட்டை கிராமம் பிள்ளையார் கோயில் எதிரே சென்றபோது, சாலையின் குறுக்கே திடீரென வந்த மாட்டின் மீது பைக் மோதியது. இதில் பைக் நிலைதடுமாறியதில் தினேசும், செல்வியும் கீழே விழுந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு செல்வி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செல்வியின் மற்றொரு மகன் சதீஷ் அனக்காவூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் எஸ்ஐ தனபால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.