சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அறநிலையத்துறை மீட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து கோயில் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான சென்னை கீழ்ப்பாக்கத்தில் 1,970 சதுர அடி பரப்பளவிலான நிலம் உள்ளது. பலகோடி ரூபாய் மதிப்பிருக்கும் இந்த நிலத்தை கடந்த 2014ம் ஆண்டு முதல் சிலர் ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வந்தனர். கடைகளை காலி செய்து நிலத்தை ஒப்படைக்குமாறு அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் கடைகளை காலி செய்யாததால் இன்று அதிரடியாக கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து ஜே.சி.பி. இயந்திரம் மூலமாக கடைகள் இடிக்கப்பட்டு நிலம் மீட்கப்பட்டது. கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 1954ம் ஆண்டு கங்காதரன் என்பவர் இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அவர் மறைவிற்கு பிறகு 2014ம் ஆண்டு முதல் சிலர் சட்டவிரோதமாக இந்த நிலத்தை அக்கிரமித்திருப்பது தெரியவந்திருக்கிறது. குறிப்பாக இந்து மகா சபை நிறுவனர் ஸ்ரீகண்டன் என்ற கோடம்பாக்கம் ஸ்ரீ இந்த நிலத்தின் பெரும்பாலான பகுதியை அக்கிரமித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை 600 கோடி ரூபாய் மதிப்பிருக்கும் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. …