சென்னை: சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கணினி சேவை மைய உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை கோயம்பேட்டை சேர்ந்தவர் 41 வயதான தினேஷ். கணினி சேவை மையம் நடத்தி வந்த அவர் நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கோயம்பேடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கணினி சேவை மையம் நடத்தி வந்த தினேஷ், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார்.இதில் கடை வருமானம், சேமிப்பு பணம் என அனைத்தையும் இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி குடி போதைக்கும் அடிமையாகி இருக்கிறார். இதுகுறித்து குடும்பத்தினர் அவ்வப்போது கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கால் வீட்டில் இருந்த தினேஷிடம் இதுகுறித்து குடும்பத்தினர் கேட்டதாக தெரிகிறது. மன உளைச்சலுக்கு ஆளானவர் இரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் தினேஷின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்….