செஞ்சி, மே 7: செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மிக்கேல் ஆலயத்திற்கு செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் வருகை தந்து சிறப்பு பிரார்த்தனை செய்கின்றனர். இந்நிலையில் பழமையான இந்த ஆலயத்தை புனரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் கோரிக்கை மனு அளித்தனர். அவர் இக்கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து ஆலயத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்வதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் மாவட்ட அதிகாரியுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆலயத்தின் உள்கட்டமைப்பு, வெளி கட்டமைப்பு பகுதிகள், சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி, ஒன்றிய செயலாளர்கள் மேல்மலையனூர் கிழக்கு நெடுஞ்செழியன், கண்காணிப்பாளர் காமராஜ், பங்குதந்தை பவுல்ராஜ், பள்ளி முதல்வர் நாயகம், பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல் மணி, முன்னாள் கவுன்சிலர் அன்பு செல்வன், நிர்வாகிகள் பர்ணபாஸ், ஆரோக்கியதாஸ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் செல்வராஜ், சகாயராஜ், விக்டோரியா, பாபு, தொண்டரணி பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.