சூலூர் : சூலூர் அருகே உள்ளது செலக்கரச்சல் கிராமத்திற்குட்பட்ட திம்மநாய்க்கன்பாளையம். இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கடந்த வாரம் தொடர்ந்து 4 நாய்கள் மர்மமான முறையில் இறந்தது. இவற்றை அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுதவிர, அந்த குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள கோழிப்பண்ணைகளில் இறக்கும் கோழிகளை பண்ணையாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் அப்படியே வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இறந்த கோழிகளை உட்கொள்ளும் நாய்கள் ஓரிரு நாட்களிலேயே இறந்துவிடுகின்றன. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுஒருபுறம் இருக்க, அப்பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் ஈக்கள் வீடுகளுக்கு படையெடுத்து வருகிறது. ஈக்கள் பெருக்கத்தால் பகல் நேரத்தில் கூட வீட்டில் சாப்பிட முடிவதில்லை எனக் கூறும் கிராம மக்கள், தினமும் மாலை ஒவ்வொரு வீட்டிலும் ஏராளமான ஈக்களை கொன்று வீசுவதாக கூறுகின்றனர்.இந்த ஈக்களால் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு தொண்டை நோய், வயிற்றுப் போக்கு குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக, கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கயும் எடுக்கவில்லை.ஈக்கள் பிரச்னை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …