திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, கடந்த சில மாதங்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்றும் இன்றும் விடுமுறை என்பதால் அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதனால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோயிலில் கூட்டம் அலைமோதியது. பொது தரிசன வரிசை, கோயில் வெளி பிரகாரம் வரை நீண்டிருந்தது. சுமார் 2 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது மற்றும் கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று மாலை 5.10 மணி முதல் 6.30 மணி வரை சூரிய கிரகணம் நடைபெறுகிறது. சூரிய கிரகணம் காரணமாக, அண்ணாமலையார் கோயிலில் நடை அடைக்கும் நடைமுறை இல்லை. இதனால் இன்று வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் அண்ணாமலையார் கோயில் ஆன்மிக மரபுபடி, சூரிய கிரகணம் தொடங்கும் நேரத்தில் 4ம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது. …