ஊட்டி : ஊட்டி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தினமும் மலை ரயில் நிரம்பி வழிகிறது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். மேலும், மலைகளின் நடுவே தவழ்ந்து வரும் மலை ரயிலில் பயணிக்கவும் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, வெளி மாநில சுற்றுலா பயணிகள் இந்த மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஊட்டி மலை ரயிலில் பயணிக்கும் கட்டணம் அதிகம் என்ற போதிலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் முன் பதிவு செய்து கொண்டு மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை பயணிக்கின்றனர். மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை குறைந்தளவே பயணிகள் பயணிக்க முடியும் என்பதால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் இருந்து குன்னூர் வரை இயக்கப்படும் மலை ரயிலில் பயணித்து தங்களது ஆசைகளை நிறைவேற்றி கொள்கின்றனர். இதனால், தற்போது ஊட்டி – குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயிலிலும் தினமும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. பொதுவாக, வார விடுமுறை நாட்களிலேயே மலை ரயிலில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால், கடந்த சில நாட்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், வார நாட்களிலும் மலை ரயிலில் அதிகமானோர் பயணிக்கின்றனர். நேற்றும் ஊட்டியில் இருந்து குன்னூர் வரை இயக்கப்படும் மலை ரயில் நிரம்பி வழிந்தது….