Thursday, October 3, 2024
Home » சுங்க கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் முதுகை உடைப்பதா?: ஒன்றிய அரசுக்கு மார்க். கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம்..!!

சுங்க கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் முதுகை உடைப்பதா?: ஒன்றிய அரசுக்கு மார்க். கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம்..!!

by kannappan

சென்னை: சுங்க கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் முதுகை உடைப்பதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் 15 சதவீத கட்டண உயர்வை அமலாக்க ஒன்றிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போதே, இந்த கட்டண உயர்வுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ஆனாலும், மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையற்ற ஒன்றிய அரசு, கட்டண உயர்வை அனைத்து சுங்கச் சாவடிகளுக்கும் விரிவாக்கியுள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். வரலாறு காணாத பண வீக்கத்தை நாடு எதிர்கொள்கிறது. மொத்த விலை பணவீக்கம் காரணமாக சிறு குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில்லரை பணவீக்கம் எளிய மக்களை பதம்பார்க்கிறது.  ஏற்கனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கநிலையை நோக்கி வேகமாக சரிந்துவருகிறது. இந்த நிலைமைகளை சீராக்க, அரசு செலவினத்தை அதிகப்படுத்த வேண்டும். மக்களின் வருமானத்தை உயர்த்த வேண்டும். அதன் மூலம் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கே அபராதம் போடும் விதமாகத்தான் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் உள்ளன. உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., ரயில் டிக்கெட் வாங்கினாலும், ரத்துச் செய்தாலும் கூட ஜி.எஸ்.டி. என்று கட்டணக் கொள்ளை அன்றாடம் அதிகரிக்கிறது. ஏற்கனவே, பெட்ரோல், டீசல், சமையல் வரிவாயுவின் விலை உயர்வு சாமானிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது.  தற்போது சுங்க கட்டண உயர்வும் வெகுமக்கள் தலையிலேயே சுமத்தப்படும். குறிப்பாக திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணம் ரூ. 185 வரை  உயர்த்தப்படுகிறது. லாரிக்கான கட்டணம் ரூ.300 வரை உயர்த்தப்படுகிறது. அனைத்து சுங்கச் சாவடிகளிலுமே 15 சதவீத கட்டண உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்து நேரடியாக பாதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும். பொதுப் போக்குவரத்தும் சீரழியும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு இருக்கும் என்ற கொள்கை மிக மிக அபத்தமான ஒன்றாகும். எனவே, ஒன்றிய அரசாங்கம் தற்போதைய கட்டண உயர்வை திரும்பப் பெற்றுக் கொள்வதுடன், ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையை கைவிட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. வாகன உரிமையாளர்கள் இதற்கு எதிராக கண்டன குரல் எழுப்பவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

You may also like

Leave a Comment

20 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi