மயிலாடுதுறை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளான வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் பூம்புகார், திருமுல்லை வாசல், பழையார், திருவெண்காடு உள்ளிட்ட கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சீர்காழியில் 19செ.மீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழி சுற்றுவட்டாரங்களில் சம்பா பயிரிடப்பட்டு 20 நாட்களே ஆன நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் பயிர்கள் பாதிக்கக்கூடிய சூழல் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டாரங்களிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. ராசேந்திரசோழன், பூவிழுந்தநல்லூர், முட்டம், ஆயக்குடி, லால்பேட்டை, குமராட்சி, நாத்தமலை உள்ளிட்ட கிராமங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 11செ.மீ மழை பதிவாகியுள்ளது….