சிவகங்கை, செப். 21: சிவகங்கையில் நடைபெற உள்ள ரயில் போராட்டம் குறித்து, அனைத்துக்கட்சியினரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சிவகங்கை வழியே சென்று வந்த மன்னார்குடி ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் வரை செல்லும் ரயில், செங்கோட்டை முதல் தாம்பரம் வரை செல்லும் ரயில் உள்ளிட்ட இவ்வழியே செல்லும் ரயில்கள், சிவகங்கை ரயில்வே ஸ்டேசனில் நிற்பதில்லை. பல்லவன் ரயில் காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. பகல் நேரங்களில் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு ரயில் இல்லை. இவ்வாறு மாவட்ட தலைநகரான சிவகங்கை ரயில்வே திட்டங்களில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, சிவகங்கையில் செப்.23 அன்று ரயில் மறியல், கடையடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இதுகுறித்து நேற்று அனைத்துக்கட்சிகள், அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. சிவகங்கை திமுக நகர் செயலாளர், நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் போராட்டம் குறித்து விளக்கி பேசினார். இந்த ரயில் மறியல் போராட்டத்தில் நகரம், ஒன்றியம் உள்ளிட்ட சிவகங்கை சட்டமன்ற தொகுதி முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது
னஎ முடிவு செய்யப்பட்டது.
மேலும், ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்ட அனைத்து பயணியர் வாகனங்களையும் இயக்காமல் இருப்பது, அனைத்து கடைகளையும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழுமையாக அடைப்பது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன் மற்றும் விசி, மதிமுக, மமக, மஜக நிர்வாகிகள், ஐக்கிய ஜமாத், வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், சிவகங்கை நகர்மன்ற கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.