திண்டுக்கல் :திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலையில் பலா, வாழை, எலுமிச்சை, அவரை, சௌசௌ, பீன்ஸ் உள்ளிட்ட காய்கனிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக முக்கனிகளில் பலாவும், வாழையும் இந்த மலையில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் பலாப்பழத்திற்கு தனி மகத்துவம் உண்டு. பலாப்பழம் இனிப்பு சுவை மட்டுமல்லாமல் அதனுடன் ஒரு புளிப்பு சுவையும் கலந்து இருக்கும். இனிப்புடன் கூடிய புளிப்பு சுவை கலந்து இருப்பதால் இந்த பழத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.சிறுமலையில் விளையக்கூடிய பலாப்பழம் திண்டுக்கல் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். வெளியூர்களில் உள்ள தங்களின் உறவினர்களுக்கும் வாங்கி கொடுத்து மகிழ்கின்றனர். சிறுமலை பலா பழத்தின் சீசன் ஜூலை மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை 4 மாதங்களுக்கு இருக்கும். சிறுமலை சந்தைக்கு 200 முதல் 500 பலாப்பழங்கள் வரக்கூடிய இடத்தில் இந்த ஆண்டு சீசன் துவக்கத்திலேயே 2000 பலாப்பழங்களுக்கும் மேலாக வருகை தந்து உள்ளது. இதனால் ரூ.200, ரூ.300 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய ஒரு பலாபழம், விலை வீழ்ச்சி அடைந்து ரூ.50க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்….