செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அரசு பள்ளியில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் சிங்கபெருமாள்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பாரேரி, திருத்தேரி, அனுமந்தபுரம், தென்மேல்பாக்கம், அஞ்சூர் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து 734 பேர் வந்து படித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி இல்லை என, புகார் எழுந்துள்ளது.
இதனால், ஏராளமான மாணவர்கள் குடிநீர் குழாய் முன்பு காத்திருக்கும் அவலம் நிலவி வருகின்றது. எனவே, மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என, பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். குடிநீர் வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.