சாத்தூர், ஜூலை 26: சாத்தூர் அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் நள்ளிரவில் தரிசு நில புற்களில் பரவிய தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் அணைத்தனர். சாத்தூர்- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஓட்டல் அருகே, பல ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் புற்கள் அதிகளவில் வளர்ந்திருந்தன.
கடந்த சில மாதமாக வீசிய கடுமையான வெயிலால் புற்கள் காய்ந்து சருகுபோல இருந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென புற்களில் தீப்பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பற்றி பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆடு, மாடு மேய்ச்சலுக்கு வந்தவர்கள் பீடி, சிகரெட் பிடித்து போட்ட துண்டுகள் மூலம் தீப்பிடித்து இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.