கோவை, ஜன.9: கோவை மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்வது உச்சகட்டமாக அதிகரித்துள்ளது. கடை மூடிய பின்னர் விடிய மதுபாட்டில்களை பதுக்கி விற்பதும், அதிகாலை நேரத்தில் மது விற்பதும் பரவலாகிவிட்டது. மாவட்ட அளவில் 33 போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மூலமாக கடந்த ஆண்டில் 6,894 வழக்குகள் பதிவானது. இந்த வழக்கில் 6,999 பேர் கைது செய்யப்பட்டனர். 55,788 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 15,530 லிட்டர் கள்ள சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தவிர கள் விற்பனையும் மாவட்ட அளவில் பரவலாக நடப்பதாக தெரியவந்துள்ளது. வழக்குகள் அதிகரித்த போதிலும் மதுபாட்டில்கள் விற்பனை குறையவில்லை. பல்வேறு குற்ற வழக்குகளில் மதுபாட்டில் விற்பனை வழக்குகளின் எண்ணிக்கையே முதலிடத்தில் இருக்கிறது. தொடர்ந்து மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கும் விற்பனை செய்பவர்கள், கள்ள சாராயம் விற்பவர்கள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.
தொடர்ந்து பல முறை வழக்கு போட்டும் இவர்கள் தொடர்ந்து மதுபாட்டில்களை முறைகேடாக விற்பதாக புகார் கிடைத்துள்ளது. மதுவிலக்கு போலீசார் கூறுகையில், ‘‘அதிகளவு மதுபாட்டில்கள் வைத்திருந்தால் கைது, சிறையில் அடைப்பு நடவடிக்கை எடுக்கிறது. குறைவான மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கள்ள சாராயம் தடுக்க தீவிர சோதனை நடத்தப்படுகிறது. கள் வியாபாரம் மாவட்ட எல்லையில் சில கிராமங்களில் நடக்கிறது. இதை தடுக்க அடிக்கடி ரோந்து பணி நடத்தப்படுகிறது’’ என்றனர்.