கம்பம், டிச. 10: வார விடுமுறையையொட்டி, சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. செங்கோட்டை வழியாக வரும் வாகனங்கள் பலாப்பள்ளி முதல் நிலக்கல் வரையிலும் ,எருமேலி வழியாக வாகனங்கள் கணமலை,துலாப்பள்ளி வழியாக நிலக்கல் வரையிலும் நீண்ட வரிசையில் இரவு பகலாக பல மணி நேரம் காத்துக் கிடக்கின்றன. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நிலக்கல் பார்க்கிங் பகுதியில் ஒன்று முதல் 17 வரையிலான பார்க்கிங் செக்டர் அமைக்கப்பட்டுள்ளது.
17 பார்க்கிங் செக்டார்களிலும் வாகனங்கள் குவிந்துள்ளதால் புதிய பார்க்கிங் அமைக்கும் பணிகளில் தேவசம் போர்டு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பல மணி நேரம் தொடர்ந்து காத்திருப்பதால் பொறுமையிழந்த ஐயப்ப பக்தர்கள் வானங்களை ரோட்டோரத்தில் நிறுத்திவிட்டு பாதயாத்திரையாக இருமுடியுடன் நடக்கத் தொடங்கியுள்ளனர். இப்பகுதிகளில் கூடுதலாக பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.