கோவில்பட்டி, ஆக. 18: தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி – கடம்பூர் ரயில் நிலையங்கள் இடையே நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர், மைசூர் – தூத்துக்குடி விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் ரயிலில் அடிபட்டு இறந்தவர், விளாத்திகுளம் தாலுகா ஜமீன் செங்கப்படையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கதிரேசன் (18) என்பதும், கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மண்ணியல் பிரிவு படித்து வந்ததும் தெரிய வந்தது. நேற்று கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிச்சென்றவர், தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்ததும் தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.