புவனகிரி, மே 27: புவனகிரி அருகே உள்ளது கிளாவடிநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது. நேற்று ஊர் மக்கள் இந்த கோயிலுக்கு வந்தபோது கோயிலின் வாசலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் புவனகிரியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அதற்கு முன்பு மற்றொரு கோயிலின் கோபுரத்தில் இருந்த கலசம் ஒன்றும் திருடப்பட்டிருந்தது. புவனகிரியில் கோயிலை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கிராம பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.