கோத்தகிரி, ஜன.30: கோத்தகிரியில் மார்க்கெட் பகுதியில் கடையில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அறிவுறுத்தலின் படி கோத்தகிரி காவல் ஆய்வாளர் ஜெயமுருகன் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜார்ஜ், தலைமை காவலர் ரமேஷ், ஆனந்த், சுரேந்தர் அடங்கிய காவல்துறையினர் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மார்க்கெட் பகுதியில் ஜெயசிம்மன் (55) என்பவரது கடையில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது கடையில், தடை செய்யப்பட்ட 150 கிலோ புகையிலை போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்து, உரிமையாளர் ஜெயசிம்மனை கைது செய்தனர். மேலும் இதன் மதிப்பு 2 லட்சத்து 37 ஆயிரம் எனவும், இதுபோல கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.