கோவில்பட்டி: கோடை வெயிலாலும், வரத்து குறைவாலும் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வில்லிசேரி, மந்தித்தோப்பு, இடைசெவல், சத்திரப்பட்டி, கழுகுமலை, கயத்தார், வானரமுட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் எலுமிச்சை செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பழம் ரூ.2 முதல் ரூ.5 வரை விற்பனை ஆனது. தற்போது கோடை வெயில் தாக்கத்தாலும் வரத்து குறைவாலும் விற்பனை சூடுபிடித்து ஒரு கிலோ ரூ.150 முதல் 200 வரை விற்கப்படுகிறது. இங்கு விளையும் எலுமிச்சை பழங்கள் கோவில்பட்டி மொத்த மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு நெல்லை, புளியங்குடி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எலுமிச்சை விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விலையேற்றம் குறித்து வியாபாரிகள் கூறும்போது, ‘கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழங்களின் விலை ரூ.150 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. பருவ மழை அதிகமாக பெய்து பூக்கள் உதிர்ந்ததால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது’ என்றனர்….