கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமம் சிங்க மகா காளியம்மன் கோயில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி முதல் நாள் அம்மனுக்கு திருகாப்பு அணிவிக்கும் வைபவம் மற்றும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் மண்டகப்படி உற்சவம் மற்றும் இரவு நேரங்களில் அம்மன் வீதி உலா காட்சியும் நடைபெற்றது. தொடர்ந்து பத்தாம் நாள் தீமிதி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் சக்தி கரகம் அலகு காவடி எடுத்து வந்தும் ஆலயத்துக்கு முன்புறம் உள்ள தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மன் வீதி உலா காட்சியும், காளி ஆட்டமும் இரவு சம்பூர்ண அரிச்சந்திரா என்ற புராண நாடகமும் நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தாண்டவன்குளம் கிராம மக்கள் செய்திருந்தனர்.