சென்னை: சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவ ஆராய்ச்சி கழகம் 2-டியோக்சி-டி-குளுகோஸ் (2டிஜி) என்ற மருந்தை பவுடர் தரத்தில் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து கொரோனா நோயை கட்டுப்படுத்தக்கூடியது என்று பல்வேறு கட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.. இது குறித்து கடந்த 3ம் தேதி பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கும், இந்திய ராணுவ ஆராய்ச்சி கழகத்திற்கும் மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போது கண்டுபிடித்துள்ள மருந்தை, பிற நிறுவனங்களும் உற்பத்தி செய்ய அனுமதியளித்து, விற்பனைக்கு கொண்டு வந்தால், மூன்றாம் அலையை எதிர்கொள்ள முடியும். எனவே, இந்த மனு குறித்து நாளை (இன்று) மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்….