திண்டுக்கல் : கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், திண்டுக்கல்லில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்வதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது.இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக ரூ.1000 கொடுக்கப்பட்டது. மேலும், அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தற்போது வாழ்வாதாரம் இழந்த மக்கள் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்கின்ற அரிசியை வாங்கிச் சென்றனர். அதைப்போல் ரேஷன் கடைகளில் ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் கூடுதல் அரிசி விநியோகம் செய்தனர்.சில மாதங்கள் நல்ல அரிசி வழங்கப்பட்டன. தற்போது சில நாட்களாக தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. இது கறுப்பு, பழுப்பு, சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது. அரிசியை வாங்கி பெண்கள் சமைக்கும்போது அதில் துர்நாற்றம், சாப்பிட முடியாமல் உள்ளது. பலரும் அதனை சாப்பிட முடியாமல் நாய்களுக்கும், கோழிகளுக்கும் உணவாக போடும் அவலம் ஏற்படுகிறது. ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவது பொதுமக்களை வேதனையடைய செய்துள்ளது. கொரோனா வேளையில் கூடுதல் அளவில் கொடுக்கப்பட்ட ரேஷன் அரிசி தரமற்ற நிலையில் உள்ளதால், அதை மக்கள் வாங்கி வீட்டில் இருப்பு வைக்கும்போது புழு, பூச்சிகள், வண்டுகள் உருவாக வாய்ப்பு உள்ளது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சில நாட்களாக ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசிதான் வழங்குகின்றனர். இதை மாற்றி நல்ல அரிசி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால், அரசு ஒதுக்கீடு செய்யப்படும் அரிசி தரமற்ற முறையில் கொள்முதல் செய்து, மூட்டை கட்டி அனுப்புவதால், அதனால்தான் தரமற்ற அரிசி ரேஷன் கடைக்கு விநியோகத்திற்கு வருகிறது’ என கூறினார்….