Saturday, September 21, 2024
Home » கொசுப்புழு கண்டறியப்பட்டதால் கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

கொசுப்புழு கண்டறியப்பட்டதால் கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

by MuthuKumar

தஞ்சாவூர், செப். 26: கொசுப்புழு கண்டறியப்பட்டதால் தஞ்சாவூரில் கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.20,000 அபராதம் விதித்து மாநகர் நல அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார். தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பொது சுகாதார பிரிவின் 14 துப்புரவு கோட்டங்களிலும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு விழிப்புணர்வு, தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியை மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, 32வது வார்டு வாணக்கார தெரு பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள தண்ணீர் நிரப்பும் டிரம்களில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டதால் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் படி ஒரு கட்டிட உரிமையாளருக்கு ரூ.10,000ம், மற்றொரு கட்டிட உரிமையாளருக்கு ரூ.10,000ம் ஆக கூடுதல் ரூ.20,000ம் அபராதம் விதிக்கப்பட்டு தஞ்சாவூர் மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் மூடி போடாமல் டிரம்களில் மற்றும் கலன்களில் தண்ணீர்கள் நிரப்பி வைப்பது, டயர்கள், டீ கப்புகள், கொட்டாங்குச்சிகள் போன்றவற்றில் மழைநீர் தேங்கி முட்டையிட்டு, அதிலிருந்து உருவாகும் கொசுக்கள் டெங்கு காய்ச்சலைப் பரப்புகின்றன. மேலும் வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்திடவும் டெங்கு கொசுவை பரப்பும் ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமலும் அதற்கு கட்டிடத்தின் அருகாமையில் தேங்காய் ஓடுகள், உரல்கள், உடைந்த பிளாஸ்டிக் சாமான்கள், உபயோகமற்ற டயர்கள் ஆகியவற்றை அகற்றிடவும் செடி வளர்க்கும் தொட்டிகளில் நீர் தேங்கி நிற்காமல் பராமரித்திடவும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு கொசுவை பரப்பும் ஏடிஸ் கொசு சாக்கடை நீரில் வளராது. தூய தண்ணீரில் மட்டுமே வளரும். இக்கொசு பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். வீட்டின் உட்புறங்களில் உள்ள பிரிட்ஜ் டிரேயில் இருக்கும் நல்ல தண்ணீரில் ஏடிஸ் கொசு முட்டையிட்டு கொசு உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் சமையல் மற்றும் குடிநீருக்கு பிடித்து வைக்கப்படும் தண்ணீரின் கலன்களை மூடி வைத்து பராமரித்திடவும், அதனை அடிக்கடி மாற்றிடவும் வேண்டும். வீடுகளில் வளர்க்கப்படும் மணி பிளான்ட் செடிகளில் தண்ணீர் ஊற்றி வளர விடுகிறோம். அந்த தண்ணீரில் இந்த கொசு வளரும் வாய்ப்பு உள்ளது. ஏர்கூலர் தண்ணீரில் இந்த கொசு வளரும் வாய்ப்புள்ளது. எனவே ஏர்கூலர் இருக்கும் அறைகளில் கொசு முட்டை நிச்சயம் இருக்க வாய்ப்புள்ளது.

மழை காலங்களில் ஏர்கூலரை அடிக்கடி துடைத்து தண்ணீரை மாற்ற வேண்டும். வீட்டின் அருகாமையில் தேவையற்ற செடி, கொடிகள் புல், பூண்டுகளில் கொசுக்கள் தங்கிக்கொள்ளும் என்பதால் அந்த இடங்களை சுத்தமாக பராமரித்திட வேண்டும். குப்பைகளை மழைநீர் வடிகால்களில் கொட்டாமலும் வடிகாலை தேக்கமின்றி பராமரித்திட வேண்டும். கட்டிடத்தின் மேல்தளங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்கி நிற்காமலும் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்காமலும் பராமரித்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

துப்புரவு ஆய்வாளர் செல்வமணி, சுகாதார ஆய்வாளர் ஸ்டான்லி சுரேந்தர், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

You may also like

Leave a Comment

one × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi