திருவனந்தபுரம்: கேரளாவில் பழக்கடையில் இருந்து 10 கிலோ மாம்பழம் திருடிய சம்பவத்தில் தேடப்பட்டு வரும் போலீஸ்காரர் சிகாப் தமிழ்நாட்டில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. கேரள மாநிலம், இடுக்கி ஆயுதப்படை முகாமில் பணிபுரிந்து வருபவர் சிகாப். கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலையில் இவர் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும் வழியில் கோட்டயம் காஞ்சிரப்பள்ளியில் உள்ள ஒரு பழக்கடையில் இருந்து 10 கிலோ மாம்பழங்களை திருடினார்.இவர் மாம்பழங்களை திருடுவது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக காஞ்சிரப்பள்ளி போலீசார் சிகாப் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை உடனடியாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய இடுக்கி மாவட்ட எஸ்பி குரியாக்கோஸ் உத்தரவிட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் தலைமறைவான சிகாப்பை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்து பல நாட்கள் ஆன பிறகும் அவரை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் சிகாப் தமிழ்நாட்டில் தேனி பகுதியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காஞ்சிரப்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தேனிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள சிகாப் மீது ஒரு பலாத்கார வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் இவர் ஏற்கனவே ஒரு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்….