தாம்பரம்: சென்னை நகரை சேர்ந்த 4 வயது சிறுவன், கடந்த 2 நாட்களுக்கு முன் இரவில் டிவி ரிமோட்டை வைத்து விளையாடியபோது அதில் இருந்த 5 செமீ நீளம், 1.5 செமீ சுற்றளவு கொண்ட பேட்டரியை ஏதோ தின்பண்டம் போல் வாய்க்குள் போட்டு விழுங்கிவிட்டான். சிறிது நேரத்தில் அந்த சிறுவனுக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவனிடம் பெற்றோர் விசாரித்தபோது பேட்டரி விழுங்கியதை சிறுவன் கூறியுள்ளான்.இதைத் தொடர்ந்து, அந்த சிறுவனை நேற்று குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனைக்கு பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அந்த சிறுவனுக்கு இரைப்பை, குடல் மருத்துவர்கள் குழு எக்ஸ்-ரே எடுத்து பார்த்தனர். அதில், அவனது வயிற்று பகுதியில் பேட்டரி சிக்கியிருப்பது தெரியவந்தது. டாக்டர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி பேட்டரியை அகற்றினர். இந்த சிகிச்சைக்கு பிறகு சிறிது நேரத்தில் அந்த சிறுவன் இயல்பு நிலைக்கு திரும்பினான். பின்னர் 2 மணி நேரத்துக்குப் பின் உணவு அருந்தினான். தனது மகனின் வயிற்றில் சிக்கியிருந்த பேட்டரியை அகற்றிய டாக்டர்கள் குழுவினருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இதுபோன்ற அபாயகர சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க, குழந்தைகளை பெற்றோர் எந்நேரமும் கவனித்து கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினர்….