கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தியாகு (36). இவர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், இவர் அதே பகுதியில் உணவகம் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது பணிகளை முடித்துவிட்டு, எளாவூர் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள தனது வீட்டுவாசலின் முன்பு சாலையோரம் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு தியாகுவின் காரை ஒருசில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் காரின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும், அந்த காருக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அந்த காரின் முன்பகுதி கொழுந்துவிட்டு எரிந்தது. காரின் பிற பகுதிகளிலும் தீ பரவியது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியாகி ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி காரில் பரவிய தீயை அணைத்தனர். இதில் அந்த காரின் முன்பகுதி எரிந்து சேதமானது. இப்புகாரின்பேரில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழில் போட்டி காரணமாக மர்ம நபர்கள் தீ வைத்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்….