அண்ணாநகர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மருது(52). இவர் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார். அங்கிருந்தபடி, கோயம்பேடு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வேலை முடித்துவிட்டு நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் கோயம்பேடு பஸ் முனையத்தில் இருந்து, பேருந்து பிடிப்பதற்காக ரோகிணி தியேட்டர் நோக்கி குடி போதையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த இருவர் மருதுவை வழி மடக்கி தான் போலீஸ் எனவும் சட்டை பாக்கெட்டில் பணம் எவ்வளவு உள்ளது கேட்டு என மிரட்டியுள்ளனர். அதற்கு, குடிபோதையில் இருந்த மருது என்னிடம் பணம் இல்லை. நான் ஏன் உங்களுக்கு பணம் தரவேண்டும் என பதிலளித்துள்ளார். அதில் ஒருவர், ‘நானே ஒரு போலீஸ் என்னிடம் திமிராக பேசுகிறாயா’ என்று சொல்லி சரமாரியாக தாக்கியுள்ளார். அடி தாங்க முடியாமல் மருது அலறும் சத்தத்தை கேட்டு அங்கு சிறிது தூரத்தில் ரோந்து பணியில் இருந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில், மருது கூறியதாவது, ‘என்னிடம் பணம் கேட்டு தாக்கியதாக அழுதுகொண்டே’ கூறினார். போலீசார் அந்த இருண்டு வாலிபர்களிடமும் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். அதில் ஒருவர் நானே ஒரு போலீஸ் என கூறி என்னிடம் விசாரணையா என போலீசாரை நோக்கி கிண்டலடித்துள்ளார். எனவே, போலீசார் மூன்றுபேரையும் கோயம்பேடு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணையை நடத்தினர். இதில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(26). இவர், அதே மாவட்டத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2018 ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள மோட்டார் வாகன பிரிவில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். மேலும், சென்னை சூளைமேடு மேத்தா நகர் பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். மற்றொருவர் விஷ்ணு(27) பேராசிரியராவதற்காக அண்ணாநகரில் பயிற்சி எடுத்து வருவது விசாரணையில் தெரிய வந்தது. இருவரும் உறவினர்கள். ஒன்றாகவே தங்கி வருகின்றனர் எனவும் தெரிய வந்தது. இதனையடுத்து கோயம்பேடு போலீசார் வழிபறியில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் சதீஷ்குமார் மற்றும் விஷ்ணு மீது வழக்குபதிவு செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், ஆயுதப்படை காவலர் குடிபோதையில் வழிபறியில் ஈடுபட்டு கைது செய்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரப்பரப்பை ஏற்படுத்திள்ளது….