திருவாரூர், ஜூலை 7: திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை ப் பொருட்கள் விற்பனை, ஆன்லைன் லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது, மணல் கடத்தல், வழிபறி உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழ க்குகளில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் எஸ்.எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று அங்குள்ள ஓகை பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கும்பகோணம் பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டைகளுடன் வந்த நபரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதனை கடத்தி வந்த கும்பகோணம் பம்பைபடையூர் பகுதியை சேர்ந்தவரான நைனாமுகமுது (57) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.16,300 மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் கடத்துலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசாரை எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டியுள்ள நிலையில் இதேபோன்று இளைஞர்களை சீரழிக்கும் வகையில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை, பொது மக்களின் சொத்துகளை திருடுதல், கைப்பற்றுதல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
குடவாசலில் ₹16 ஆயிரம் குட்கா கடத்தியவர் கைது
previous post