சென்னை: மனநல பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகும், கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் நோயாளிகள் வாடுவதை தடுப்பது குறித்து தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்திற்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ஜெ.மோகன்ராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வருந்தத்தக்க நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் காமராஜரிடம் நெருங்கி பழகியவரும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் மகன் நடராஜமூர்த்தி சங்கிலியால் பிணைக்கப்பட்டு நகர முடியாத நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் உள்ளதாக தெரிய வந்தது.இந்த மருத்துவமனையில் 3000 நோயாளிகள் உள்ள நிலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் முழுமையாக குணமடைந்தாலும் இன்னும் மருத்துவமனையில் வாடுவதாக தகவல்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை கோரி தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு அளித்தும் தற்போது வரை எந்த பதிலும் வரவில்லை. எனவே, எனது மனு மீது தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூக வலைதள தகவல்களின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல், எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேசமயம், முறையாக ஆதாரங்களை திரட்டி புதிதாக மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்….