பாவூர்சத்திரம், ஜூலை 10: கீழப்பாவூரில் அரிசி ஆலையில் பூட்டை உடைத்து திருடியவரை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்தனர். கீழப்பாவூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த வெண்ணிநாடார் (65) என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை கீழப்பாவூர் ஊரணி அருகில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இவர் ஆலையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை ஆலைக்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த ரூ.1.29 லட்சம் மதிப்பிலான மோட்டார் மற்றும் மின்சாதன பொருட்கள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கீழப்பாவூர் வாணியர் காந்தி சிலை தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அருண்குமார் (29) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், திருடிய பொருட்களை மீட்டனர்.