கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பன்னியள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அரசு ஆண்கள் உயர் நிலைப்பள்ளியில் நேற்று முன் தினம் மாணவர்கள் மாங்கொட்டையை எறிந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது மாணவர்களிடையே ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மூன்றாவதாக ஒரு மாணவர் என் நண்பன் மீது நீ எப்படி மாங்கொட்டையை எறியலாம்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் உன்னை தீர்த்துக்கட்டி விடுவேன் என்று ரவுடி தோரணையிலும் பேசியிருக்கிறார். இதில் பயமடைந்த அந்த மாணவர் அடுத்த நாள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருந்து இருந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவரின் செல்போன் நம்பருக்கு வாட்ஸ் அப் மூலமாக வாய்ஸ் மெசேஜில், நீ இன்று பள்ளிக்கு வராததால் தப்பித்தாய் இல்லை என்றால் உன்னை தீர்த்துக்கட்டி இருப்பேன்; மேலும் உன் குடும்பத்தையும் சேர்த்து தீர்த்துக்கட்டி விடுவேன் என பேசி அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை பள்ளிக்கு வந்த அம்மாணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவரை குத்தியுள்ளார். இதில், முதுகில் காயம் ஏற்பட்ட மாணவரை உடனடியாக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், முதுகில் கதியானது 4 செ.மீ. ஆழத்திற்கு இறங்கியிருக்கிறது, எனினும் எந்தவித ஆபத்தும் இல்லை; மாணவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தகவல் அறிந்த காவேரிப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களிடையே கத்திகுத்து கலாச்சாரத்தைக் கண்டு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர்….