நத்தம், ஆக. 9: நத்தம் காந்தி நகரில் மலையாளத்து கருப்புசாமி, மந்தையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான மாடு, நேற்று முன்தினம் இரவு மற்றொரு காளையுடன் முட்டிக்கொண்டது. இதில் நிலைதடுமாறிய கோயில் காளை அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்தது. அந்த காளையின் உடலுக்கு மாலைகள், சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி, துண்டுகள் போன்றவற்றை அணிவித்து அஞ்சலிக்காக அங்குள்ள மந்தையில் கோயில் நிர்வாகிகள் வைத்தனர். பொதுமக்கள் கண்ணீர் மல்க காளைக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து காளையின் உடலை கோயிலின் அருகிலேயே மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இந்த காளை இறந்ததால் அப்பகுதியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த கோயில் காளை அலங்காநல்லூர், பாலமேடு, கொசவபட்டி, அய்யாபட்டி, தவசிமடை, சங்கரன்பாறை, நத்தமாடி பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிகட்டுகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.