ஸ்ரீநகர் : காஷ்மீரில் வங்கி அதிகாரி சுட்டு படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரத்தில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டு இருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக அப்பாவி மக்கள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர், போலீசார் போன்றவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம் தாசில்தார் அலுவலகத்தில் நுழைந்த தீவிரவாதிகள், பண்டிட் பிரிவை சேர்ந்த ராகுல் பட் என்ற ஊழியரை சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, 2 போலீசாரையும் கொன்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 2 ஆசிரியைகளை சுட்டு கொன்றனர். இதனால், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் இடையே பீதி நிலவுகிறது. இந்நிலையில், குல்காம் மாவட்டம், அருகே மோகன்போராவில் உள்ள எல்லாக்கி தெஹாதி வங்கியில் நேற்று திடீரென நுழைந்த தீவிரவாதி, அங்கிருந்த விஜயகுமார் என்ற மேலாளரை சுட்டுக் கொன்றனர். வங்கி மேலாளர் கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே மத்திய காஷ்மீர் மாவட்டம் சதுரா பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் திலகேஷ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். …