ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 ராணுவ வீரர் மரணம் அடைந்தனர். தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.தெற்கு காஷ்மீர், சோபியான் மாவட்டம், ஜைன்போராவில் உள்ள செர்மார்க்கில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அந்த இடத்தை ராணுவத்தினரும், போலீசாரும் சுற்றி வளைத்தனர். அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி, தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகப்பட்ட வீட்டை முற்றுகையிட்டனர். அந்த வீட்டில் சோதனையிட முயன்றபோது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதி, வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில், சந்தோஷ் யாதவ், சவான் ரோமித் தானாஜி ஆகிய 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில், அப்துல் கயூம் தர் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டான். இவன் புல்வாமாவை சேர்ந்தவன். அவனிடம் இருந்து ஏகே ரக துப்பாக்கி, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. படுகாயமடைந்த ராணுவ வீரர்கள் சிகிச்சை பலனின்றி வீர மரணம் அடைந்தனைர். தீவிரவாதிக்கு அடைக்கலம் அளித்த வீட்டின் உரிமையாளர் கெகர் அகமது பட்டை தீவிரவாத தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். …