காஞ்சிபுரம்: கார்த்திகை மாத முழு பவுர்ணமியான கார்த்திகை திருநாளன்று வீடு வாசல், சுற்றுச்சுவர், மாடி, தோட்டம், குப்பை மேடு, வணிக நிறுவனங்கள், நீர்நிலைகள் என பயன்பாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் வரிசையாக அகல் விளக்கு தீபம் ஏற்றி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும். அதன்படி, நேற்று காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் ராஜகோபுரம், வரதராஜ பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில், குமரகோட்டம், வைகுண்ட பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், வழக்கறுத்தீஸ்வரர் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், அழகிய சிங்க பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் தீபமேற்றி வழிபாடு செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடு, வாசல், மாடிப்படி உள்ளிட்ட பகுதிகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதே போல், செங்கல்பட்டு மாவட்டத் தில் உள்ள கோயில்கள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர்.