குடியாத்தம், ஜூலை 20: பேரணாம்பட்டு அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். பேரணாம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது, அவருக்கும் பேரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்(28) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. தொடர்ந்து, ராஜேஷ் அந்த இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜேஷை வற்புறுத்தி வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் ராஜேஷ் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அந்த இளம்பெண் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் ராஜேஷ் மற்றும் அவரது தாய், தந்தை, அண்ணன், அண்ணி உட்பட 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.