காஞ்சிபுரம் காஞ்சிபுரம் ஆலடிதோப்பு தெருவில் மேனுவல் வழியாக கழிவுநீர் வெளியேறி தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால், அப்பகுதி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், தொற்று நோய்கள் பரவுவதாகவும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி 35வது வார்டு பகுதியில் ஆலடிதோப்பு தெரு உள்ளது. இந்த பகுதியில் அதிகளவில் நெசவாளர்கள், தனியார் கம்பெனி தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறியதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் மேனுவல் அமைக்கப்பட்டது. இந்த மேனுவல் சாலை உயரத்தில் இருந்து சுமார் ஒன்றரை அடி முதல் 2 அடி வரையிலான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து கடந்த சில தினங்களாக இந்த மேனுவல் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால், சாலையில் செல்பவர்கள், நடக்க முடியாமலும், வாகனம் ஓட்ட முடியாமலும் சிரமம் அடைந்து வருகிறார்கள். காலை நேரங்களில் அதிகளவில் பாதாள சாக்கடை மேனுவல் வழியாக வெளியேறுவதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் அதிகளவில் நெசவாளர்கள் வசித்து வருகிறோம். சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால் பட்டுசேலை நெய்வதற்கான பாவு நூல் பிரிக்க முடியவில்லை. மேலும், ஜரிகை கருப்பாகி விடுவதால். பட்டு சேலையின் தரம் குறைந்து விடுகிறது. இதனால், எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. மேலும் குழந்தைகள் தொற்று நோய் பாதிப்புக்குள்ளாகி அடிக்கடி மருத்துவமனைக்கு செலவழிக்க வேண்டியுள்ளது என்றும் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இப்பகுதி மக்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.