பெரம்பூர்: வியாசர்பாடி பி.கல்யாணபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் முருகேசன்(67), வியாசர்பாடி கூட்செட் பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6ம் தேதி இரவு 9 மணிக்கு தனது வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது பக்கத்து வீட்டில் இருந்து கழிவு நீர் வெளியே வந்ததால் அதுபற்றி பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் அருள்செல்வன் (எ) மண்ணாங்கட்டி ராதிகா, மணி, இலாமல்லி ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி முருகேசனை அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் முருகேசனுக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. மேலும் அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டதால் அவரது மனைவி கங்கா உதவியுடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்று உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். ஏற்கனவே அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்ததால் தற்போது காயம் பலமாகி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து வியாசர்பாடி பி.கல்யாணபுரம் 3வது தெருவை சேர்ந்த அருள்செல்வன் (எ) மண்ணாங்கட்டி(37), மணி (எ) மணிமாறன்(37) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராதிகா(32), இலாமல்லி(55) ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. …