தாராபுரம், ஜூலை 16: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் மதிய உணவு திட்டம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் 4 நகராட்சி நடுநிலைப்பள்ளி, 1 நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப்பட்டு தாராபுரம் கொளிஞ்சிவாடியில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 200 மாணவ மாணவிகளுக்கு நேற்று இனிப்புகள் பாயாசத்துடன் அறுசுவை மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறுசுவை உணவுகளை பரிமாறினார். முன்னதாக காமராஜரின் மாணவர் நலத்திட்டங்கள், மதிய உணவு திட்டம் உள்ளிட்டவை பற்றி நகர்மன்ற தலைவரும் நகர்மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோரும் பள்ளி மாணவ மாணவிகளிடம் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர்மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், முகமது யூசுப், உசானா பானு, கல்பனா, சாஜிதா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் யூசுப், வார்டு நிர்வாகிகள் அக்பர் பாஷா, ஷேக் பரீத், மயில்சாமி உட்பட பள்ளி ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.