தண்டையார்பேட்டை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்றிரவு தங்கசாலையில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு சுடரொளி சொல்லரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன், சேகர்பாபு, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் மேற்குப் பகுதி, 54வது வட்டம் திமுக சார்பில், முத்தமிழறிஞர் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்றிரவு தங்கசாலையில் கருப்பு-சிவப்பு உணர்வின் நிறம், கலைஞர் சொல்லு தமிழர் வரம் என்ற தலைப்பில் சுடரொளி சொல்லரங்கம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். இதில் பொது செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல் உள்பட பலர் பங்கேற்று, கலைஞரின் பெருமைகளை விளக்கி பேசினர். இக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், தற்போது அறநிலையத்துறை என்றாலே சேகர்பாபு என்பதை குறிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கலைஞரைப் போல் பல்வேறு பரிமாணங்களுடன் வேறொருவர் பிறக்க முடியாது. தான் காலடி எடுத்துவைத்த துறையை மாற்றியமைத்தவர் கலைஞர். சமஸ்கிருதம் கலக்காமல் கலைஞர் எழுதிய பிறகுதான், எழுத்துகளுக்கே உற்சாகம் பிறந்தது. கலைஞர் பேசிய பிறகுதான் எழுச்சி வந்தது. தமிழ் சினிமாவில் வசனங்களை எழுதி, திரையுலகையே மாற்றியமைத்தவர். அவர் உருக்கமாகப் பேசும்போது கேட்கிற கூட்டம் அழும். வரலாற்றிலேயே 50 ஆண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர், உலகத்திலேயே கலைஞர் மட்டும்தான். கலைஞரையே வென்றால்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெருமை. தந்தையைவிட புகழ்பெற்ற ராஜேந்திர சோழனைப் போல் மு.க.ஸ்டாலின் புகழ்பெறுவார். கலைஞரைப் போல் ஒரு தலைவரை, ஜனநாயகவாதியை எங்கும் பார்க்கவே முடியாது. அண்ணாவைப் பற்றி தினமும் பேசாமல் கலைஞர் இருந்ததில்லை. மருத்துவமனையில் இருந்தபோது கூட அண்ணாவின் பெயரை உச்சரித்தவர். தந்தை, தாய் எல்லாமான தலைவர் கலைஞர். தலைவனுக்கு செய்யவேண்டிய நன்றிகளை எல்லாம் கலைஞரின் மகனுக்கு செய்துவிட்டு செல்வேன். நூற்றாண்டு கொண்டாட உள்ள நிலையில், ஓராண்டுக்கு கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் என்று துரைமுருகன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்….