கலவை : கலவை தாலுகாவிற்கு உட்பட்ட ஏரிகளில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவிற்கு உட்பட்ட ஏரி மற்றும் கால்வாய் பகுதியில் பயிர் மற்றும் கரும்பு பயிர் செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் கலவை தாசில்தார் ஷமீம், தலைமையில் மண்டல துணை தாசில்தார் சத்யா, வருவாய் ஆய்வாளர்கள் வினோத்குமார், வீரராகவன், நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் ராஜேந்திரன், கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, மற்றும் போலீசார் விரைந்து சென்று அகரம் ஏரி மற்றும் கால்வாய் 2, ஏக்கர் புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்ட பயிர், கரும்பு உள்ளிட்ட பயிர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று முன்தினம் அதிரடியாக அகற்றினர். அதேபோல் கலவை அடுத்த மழையூர் கிராமத்தில் ஏரியில் 3 ஏக்கர் பயிர் செய்து ஆக்கிரமித்து இருந்ததை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றி அப்புறப்படுத்தினர். அப்போது விவசாயிகளிடத்தில் மீண்டும் இதேபோல் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதில் விஏஓக்கள் ராணி, விஜயகுமார் மற்றும் போலீசார் கிராம உதவியாளர்கள் பொதுப்பணித்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்….