கரூர், ஜூன் 29: கரூர் வெங்கமேடு அருகே போதை மாத்திரை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் 2 இளைஞர்கள் போதை மாத்திரை விற்பனை செய்வதாக வெங்கமேடு போலீசார்களுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இரண்டு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த வெங்மேடு பகுதியை சேர்ந்த சூர்யா(24), மனோஜ்(24) ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, திருப்பூரில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, விற்பனை செய்ததாக ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், அவர்களிடம் இருந்து 33 போதை மாத்திரைகள் மற்றும் இரண்டு சக்கர
வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.