கம்பம், ஜூன் 24: கம்பம் தபால்நிலையம் அருகேயுள்ள ஜீப் ஸ்டாண்ட் தெற்கு பகுதியில் நகராட்சி சுகாதாரவளாகம் உள்ளது. இந்த கட்டிடத்திற்கு மேற்கு பகுதியில் கொன்றை மரம் இருந்தது. நல்ல நிலையில் பூ பூத்து குலுங்கிய மரம் நேற்று முன்தினம் மாலை திடீரென வேரோடு சாய்து எதிரேயுள்ள நகராட்சி சுகாதார வளாகத்தில் மீது விழுந்தது. இதில் சுகாதார வளாகத்தின் மேற்கூரை சேதமடைந்தது. இதையடுத்து மரம் அகற்றும் பணியில் கம்பம் நகராட்சி துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி ஆணையாளர், வருவாய்துறை ,வனத்துறை மற்றும் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அளித்தனர். அதில் நகாட்சி சுகாதார வளாகம் எதிரே தனியார் பெட்ரோல் பல்க் அமையவுள்ளது. இதற்காக அப்பகுதியில் மின்வயர் செல்லும் பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
டெலிபோன் ஜங்கசன் பெட்டி இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மரத்தின் வேர்பகுதியில் ஆசிட் மற்றும் கெமிக்கல் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக மரத்தின் வேர்பகுதியை வழுவிழக்க செய்துள்ளதால் தான் மரம் வேரோடு சாய்ந்துள்ளதாகவும், எனவே மரத்தின் வேர்பகுதியையொட்டிய மண்ணை பரிசோதனை செய்யவேண்டும் என கூறப்பட்டிருந்தது. புகாரின் எதிரொலியால் நகராட்சிதுறையினர் மரத்தை அகற்றும் பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.