கன்னியாகுமரி, செப்.19: பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஓண திருவிழா மற்றும் பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு நேற்று பல்வேறு பூஜைகள், விஸ்வரூப தரிசனம், அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. பவுர்ணமி பூஜையில் கலந்துகொள்வதற்காக திருவனந்தபுரம் கவுடியார் அரச குடும்பத்தை சேர்ந்த ராணி கவுரி பார்வதி பாய் நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தார். அவர் தொடர்ந்து பகவதியம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு வந்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், கோயில் மேலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து அம்மனை தரிசனம் செய்த ராணி கவுரி பார்வதி பாய், கோயிலின் உட்பிரகாரத்தை சுற்றி வந்தார். பின்னர் அவருக்கு கோயில் மேல்சாந்தி பிரசாதம் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட ராணி கவுரி பார்வதி பாய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.