ஆர்.கே.பேட்டை, அக்.9: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், தாமனேரி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அந்த, அங்கன்வாடி மையம் சேதமடைந்ததால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23ம் நிதியாண்டில் ₹13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும், இதுவரை திறந்து வைக்கப்படவில்லை. எனவே, கடந்த ஓராண்டாக திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தினை உடனடியாக குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.