ஆவடி: ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள வணிக வளாகத்தில் இரு கடைகளை உடைத்து லேப்டாப், ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடியை அடுத்த திருநின்றவூர், சி.டி.எச் சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட வணிக வளாகத்தில் வியாபாரம் முடிந்து கடைகளை பூட்டி விட்டு வியாபாரிகள் வீட்டுக்கு சென்றனர். பின்னர், நேற்று காலை வணிக வளாகத்தில் உள்ள மருந்து, பேக்கரி கடைகளின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இதனையடுத்து, கடையின் உரிமையாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். அப்போது, மேற்கண்ட இரு கடைகளில் ஒரு லேப்டாப், ரூ.8ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. இது குறித்து மருந்துக் கடையின் உரிமையாளர் தமிழ்குமரன்(33) திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் திருவள்ளுவர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கடைகளை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை தேடுகின்றனர்….