திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைதானவர் சொப்னா. ஒரு வருடத்துக்கு மேல் சிறையில் இருந்த இவர், சில மாதங்களுக்கு முன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘எச்ஆர்டிஎஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சொப்னாவுக்கு ₹43 ஆயிரம் சம்பளத்தில் அதிகாரியாக வேலை கிடைத்தது.பாஜ, ஆர்எஸ்எஸ்.சின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனம், ஆதிவாசி மக்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டிக் கொடுக்கிறது. அதன் ஒரு பகுதியாக, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் உள்ள 300 ஆதிவாசி குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்து வருகிறது. இந்நிலையில், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் சொப்னா நேற்று பணியில் சேர்ந்தார். ‘இந்த வேலை எனது வாழ்க்கையில் 2வது பாகத்தின் தொடக்கம். தற்கொலை எண்ணத்தில் இருந்த எனக்கு புதிய வேலை கிடைத்தது பெரிய விஷயம்,’ என்று அவர் கூறினார். ஆனால், இந்த மகிழ்ச்சி அவருக்கு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. இவர் புதிய வேலையில் சேர்ந்திருப்பது பற்றி நேற்று செய்திகள் வெளியான நிலையில், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக எச்ஆர்டிஎஸ் நிறுவன தலைவர் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார். ‘என்னுடைய அனுமதி இல்லாமல் சொப்னாவுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது,’ என்று அவர் கூறியுள்ளார். அதே நேரம், சொப்னாவுக்கு தொடர்ந்து வேலை வழங்கப்படும் என்று இந்நிறுவனத்தின் மற்றொரு உயரதிகாரி கூறியுள்ளார். …