புதுடெல்லி: ‘ஏழை, நடுத்தர மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டதால்தான், சட்டத்தின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜியை போலீசார் கைது செய்தனர்,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவருடைய உதவியாளர்கள் 4 பேர் மீது தமிழக போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டு தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்தும், முன்ஜாமீன் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவை கடந்த 6ம் தேதி விசாரித்த நீதிபதிகள், அவருடைய கைது நடவடிக்கை தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:ராஜேந்திர பாலாஜியால் ஏமாற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகாரின் அடிப்படையில்தான் அவர் மீது முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டே, சென்னை உயர் நீதிமன்றம் அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும் வரையில், தமிழக போலீசார் அவரை கைது செய்யவில்லை. அது தள்ளுபடி செய்யப்பட்ட பிறகே, போலீசார் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்தனர். தலைமறைவான அவரை பல நாள் தேடுதலுக்குப் பிறகே போலீசார் கைது செய்தனர். இதில், எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. அவர் மீது தொடர்ந்து பல மோசடி புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. வேலைக்காக காத்திருக்கும் ஏழை, நடுத்தர மக்களின் இயலாமையை குறிவைத்து, இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது. எனவே, இதை எளிதாக எடுத்து கொள்ள முடியாது. 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால், அது சாட்சிகளை அச்சுறுத்துவதோடு மட்டுமில்லாமல், விசாரணையின் போக்கையே பாதிக்கும். அதனால், அவருடைய மேல்முறையீட்டு மனு, ரிட் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது….