வேலூர்: வேலூர் அருகே எஸ்ஐயை பணி செய்ய விடாமல் தடுத்த 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த மேல்நகர் ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே தகராறு உள்ளது. இதில் ஒரு தரப்பினரை கண்ணமங்கலம் போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்நிலையில் மற்றொரு தரப்பை சேர்ந்த 3 பேரை எஸ்ஐ சங்கர் நேற்று முன்தினம் கைது செய்து கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றார். அப்போது வழியில் கைதானவர்களின் உறவினர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் திரண்டு எஸ்ஐ சங்கரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதி வேலூர் தாலுகா எல்லைக்குட்பட்டது என்பதால் அவர் நேற்று வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து எஸ்ஐயை பணி செய்யவிடாமல் தடுத்த அதேபகுதியை சேர்ந்த சுதாகர், சுந்தரி, ஜெயமாலினி, சண்முகம் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.