மேலூர் : மேலூர் அருகே மேலவளவு பகுதியில் இருக்கும் ரேஷன் கடை பெரும்பாலும் பூட்டிக் கிடப்பதாகவும், எப்போதாவது திறப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் புதிய பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்,குடும்ப தலைவர் அல்லது தலைவி மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியும். இது கிராமப்புற ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு சாதகமாக மாறி வருகிறது. மேலவளவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள ரேஷன் கடை விற்பனையாளர்கள் சிறிது நேரம் மட்டும் கடையை திறந்து வைத்துவிட்டு, மூடிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால், நூறுநாள் வேலைக்கு செல்லும் குடும்ப பெண்கள், பணிக்கு செல்லும் ஆண்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து, பொருட்களை வாங்க முடிவதில்லை என புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இம்முறையை மாற்றி, குடும்பத்து உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொருட்களை வாங்கலாம் என பழைய முறையில் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்….